Monday, 13th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: ரயில்வே ஊழியரை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி செய்த 4 மர்ம நபர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பொன்மலை ரயில்வே புது காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (33). இவர் பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பொன்மலைப்பட்டி வ.உ.சி. மைதானம் அருகே வந்த போது 4 மர்ம நபர்கள் அவரை கல்லால் சரமாரியாக தாக்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே சென்றவர்கள் அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்து பொன்மலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு தலையில் பலத்த காயத்துடன் கிடந்த சந்திரசேகரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி ரயில்வே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் சம்பவத்தன்று காலை பொன்மலைப்பட்டியில் உள்ள தனது கள்ளக்காதலியின் வீட்டின் முன்பு சந்திரசேகர் நின்று கொண்டிருந்ததாகவும் இதை அவருடைய மனைவி சத்யா மற்றும் மைத்துனி ஆகியோர் பார்த்ததாகவும் இதை கவனித்த சந்திர சேகர் அங்கிருந்து
புறப்பட்டு சென்ற போது தான் வ.உ.சி. மைதானம் அருகே அவரை மர்மநபர்கள் மறித்து தாக்கியது தெரியவந்தது.
இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் பிரச்சினையில் அவர் தாக்கப்பட்டாரா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா என்று முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள்.